கர்நாடக அரசு VIP அழைப்பிதழ் நிகழ்ச்சி காலை 10 மணிக்கு ஆரம்பம், சிலை திறப்பு 11 மணிக்கு என்று கூறியது. நாங்கள் காலை 8 மணிக்கு புறப்பட்டு அரங்கத்திற்கு நடந்தோம். RBANMS மைதானத்தில் நிகழ்ச்சி. அலசூர் ஏரியை சுற்றி நடந்தோம். 18 ஆண்டுகளாக இதற்கு தானே காத்துக்கொண்டிருந்தோம்?
பல நினைவுகள் மனதில் உலா வந்தன. நான் பெங்களூரில் வளர்ந்த பொழுது பெங்களூர் தமிழ் சங்கத்தலைவர் திரு நீலகண்டன் அகாலமாக மறைந்தது. தமிழ் சங்க வளர்ச்சிக்கு அயராமல் உழைத்த அவர் நினைவாக, அலசூர் ஏரியை ஒட்டி தமிழ் சங்கம் இருக்கும் அண்ணா சுவாமி முதலியார் தெருவின் கோடியில் இருக்கும் வட்டத்திற்கு "நீலகண்டன் வட்டம்" என்று பெயர் சூட்டியது. பிறகு அந்த வட்டத்திற்குள் இருக்கும் பூங்காவில் திருவள்ளுவர் சிலை ஒன்றை நிறுவ முடிவெடுத்தது. பிறகு 1991 செப்டம்பர் 1 ஆம் நாள் அச்சிலையை முதல்வர் பங்காரப்பா, எங்கள் தொகுதி MLA கே ஜெ ஜார்ஜ் தலைமையில் திறந்து வைப்பதாக இருந்தது. பிறகு ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் முதலாக ஒரு கன்னட அமைப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. விழா நடப்பதற்கு முதல் நாள் சிலை திறக்க கூடாது என்று வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த கர்நாடக ஐ கோர்ட் விழாவிற்கு தடை விதித்தது. பிறகு ஒரு கோணிப்பையை எடுத்து பெங்களுரு போலீஸ் ஏளனத்துடன் அந்த சிலை மேல் போர்த்தியது. பிறகு அந்த அலசூர் ஏரியை சுற்றி நடக்கும் போதெல்லாம் மூடிய அந்த சிலையைப்பார்த்து இதயம் வலித்தது. வள்ளுவரே - உன்னை கேவலப்படுத்தும் நிலையில் அல்லவா நாங்கள் விட்டு விட்டோம் ? இதை என்று நாங்கள் மாற்றப்போகிறோம் என்று உள்ளத்துக்குள் குமுறியது. இப்படி எண்ண அலைகள். 18 ஆண்டுகள் ஓடி விட்டன. என் 20 ஆண்டு அமெரிக்க வாழ்க்கை முடிந்து என் ஊர் திரும்புகிறேன். இதை விட மகிழ்ச்சியான செய்தி பெங்களூரில் வேறு என்ன இருக்க முடியும்?
பெங்களூர் தமிழ் சங்கமும் 18 ஆண்டு காலமாக எவ்வளவோ போராடிப்பார்த்தது. தொடர்ந்து வந்த முதல்வர்களிடம் - பங்காரப்பா, வீரப்ப மொய்லி, தேவே கௌடா, ஜெ .எச். பாட்டில், எஸ்.எம். கிருஷ்ணா, தரம் சிங்க், எச். டி. குமாரஸ்வாமி - கேட்டுப் பார்த்து. குடியரசுத் தலைவர்களிடம் கேட்டுப் பார்த்தது. தமிழக முதல்வர்களிடம் முறையிட்டுப் பார்த்தது. ஒன்றும் நடக்க வில்லை. பிறகு காலம் கனிந்தது. தலைவர்கள் மாறினர். எண்ணங்கள் மாறியது. எடியூரப்பா அவர்களுக்கும், கலைஞர் கருணாநிதிக்கும் ஒரு தனிப்பட்ட நட்பு உருவாகியது. ஒரு சுமூகமான தீர்வு ஏற்பட்டது. சென்னையில் சர்வக்ஞர்யருக்கு ஓர் சிலை என்றும் பெங்களூரில் திருவள்ளுவருக்கு ஓர் சிலை என்றும் முடிவானது. எடியூரப்பா அனைத்து கன்னட அறிஞரையும் அழைத்து இதை குறித்து பேசினார். குறிப்பாக இதற்கு பல முறை எதிர்ப்பு தெரிவித்த இந்நாள் எதிர் கட்சித்தலைவர் சித்தராமையா அவர்களையும் கலந்து பேசி சம்மதிக்க வைத்தார். கன்னட புலவர்களான திரு. பாட்டில் புட்டப்பா, திரு.சந்திரசேகர கம்பார், திரு.ஹம்பா நகரஜையா, ஞானபீட விருது பெற்ற திரு. அனந்தமூர்த்தி, அராய்ச்சியாளர் திரு. சிதானந்தமூர்த்தி, திரு.சித்தலிங்கையா மற்றும் திரு. நானையா அவர்களும் திருவள்ளுவரை போற்றி பேசி இந்த சிலை திறப்பை வரவேற்றனர். ஆனால் இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரு ஒற்றுமையை கொண்டு வந்த பெருமை நிச்சயமாக திரு. எடியூரப்பா அவர்களையே சாரும்.
விழாவிற்கு சுமார் 30,000 பேர் கூடினர். வழி நெடுக இரு முதலமைச்சர்களை வாழ்த்தியும், குறிப்பாக கலைஞர் அவர்களை வாழ்த்தியும் கட்-அவுட்களும், பேனர்களும் இருந்தன. தமிழக விருந்தினர்கள் - அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரை முருகன், பரிதி இளம்வழுதி, பொன்முடி, மத்திய அமைச்சர் ராசா, வீரபாண்டி ஆறுமுகம், சபாநாயகர் ஆவுடையப்பன், மற்றும் தயாளு அம்மாள், கலைஞர் மகள் செல்வி, அவர் கணவர் செல்வம் வந்திருந்தனர். கலைஞர் அவர் உரையில் வைரமுத்துவை குறிப்பிட்டார் - ஆனால் அவரை பார்க்க முடியவில்லை. VIP பாஸ் இல்லாமல் வந்த திரு. வீரபாண்டி ஆறுமுகத்தை அடையாளம் தெரியாமல் காவல் துறையினர் உள்ளே விட மறுக்க, அவர் உதவிக்கு சென்றவர் நமக்கு நன்று பரிச்சயமான டாக்டர். மயில்சாமி அண்ணாதுரை!
விழா ஒரு இசை நிகழ்ச்சியுடன் 10 மணிக்கு தொடங்கியது. கன்னட நாட்டின் பெருமையை பறை சாற்றி பாடல்கள் இருந்தன. மறந்தும் தமிழ் பாடல்களை அவர்கள் பாடவில்லை. எங்கிருந்தாலும் கன்னடனாக இரு, கன்னட நாட்டிற்கு பெருமை சேர் என்றும் பாடல்கள் அமைந்து இருந்தன. 10:45 மணிக்கு எடியூரப்பா அவர்கள் அவைக்கு வந்து எல்லா ஏற்பாடுகளையும் பார்வையிட்டு சென்றார். 11:30 மணிக்கு வெளியில் ஒரே சத்தம், விசில் பறந்தது. கலைஞர் வந்து விட்டார் என்று அவையில் அமர்ந்தோர் அறிந்தனர். 11:35 மணிக்கு மேடையில் வந்து அமர்ந்தார். 11:37 மணிக்கு கன்னட வாழ்த்து பாடலுடன் சிலை திறப்பு விழா தொடங்கியது. வெங்கையா நாயிடு கலைஞர் பக்கத்தில் அமர்ந்து, இரு முதலமைச்சர்களுக்கும் மொழி பெயர்ப்பாளராக இருந்தார்.
சிலையை 12 மணிக்கு ரிமோட்-control பட்டனை அழுத்தி திறந்து வைத்தார். வெளியில் பட்டாசு சத்தம் ஒரு 5 நிமிடங்களுக்கு காதை பிளந்தது. அந்த சிலையை பார்த்ததும் பலர் ஆனந்த கண்ணீர் வடித்தனர். அதில் அடியேனும் ஒருவன். எத்தனை ஆண்டுகள் இதை காண காத்திருந்தோம்! சீரிய பார்வையுடன், ஒரு கம்பீர சிரிப்போடு வீற்று இருந்தார் திருவள்ளுவர்! ஒரே கை தட்டல், ஒரே விசில் சத்தம். அவை அதம் பறந்தது. சத்தம் அடங்கியதும் கலைஞர் அவருக்கே உரிய பாணியில் அழகாக உரை ஆற்றினார். அவர் மேல் ஈழ விடயத்தில் எனக்கு இருந்த கோபம் மிக மிக லேசாக குறைந்தது. 18 ஆண்டுகளாக தான் பெங்களூரில் எந்த ஒரு பொது விழாவிலும் - கட்சியாகட்டும், இலக்கியமாகட்டும் - கலந்து கொள்வதில்லை என்று சபதம் எடுத்திருந்ததாகவும், அதை இந்த விழாவுடன் முடித்து விட்டதாகவும் கூறினார். இது ஒரு சிலை திறப்பு விழா மட்டுமல்ல - இரு மாநிலங்களின் மக்களின் இதயத்தை திறக்கும் விழா என்று கூறினார். சர்வக்ஞரின் நூல்களை திரு. இறையடியான் தமிழில் மொழி பெயற்று வருவதாகவும், சர்வக்ஞர் மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பை சேர்ந்தவர் என்றும், அவர் சமூக அவலங்களை தன் பாடல்களில் சாடியவர் என்றும் கூறினார். பல முற்போக்கு கருத்துக்களை கூறியவர் என்றும் சாதி-மத பேதமற்ற சமுதாயத்தை விரும்பியர் எனவும் கூறினார். அவர் சிலை சென்னையில் திறக்க வேண்டும் என்று கூறிய பொழுது ஒரு தமிழன் கூட அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அவர் கூறியபொழுது கை தட்டல் காதை பிளந்தது.
இந்த சிலை திறப்பில் ஒரு அரசியலும் இல்லை, வெறும் அகவியல் தான் என்று அழகாக கூறினார். கங்கை நதியில் நீராடினால் மோட்சம் அடைவீர்கள் என்று கூறுபவரே, தவளையும், மீனும், தேளும் தான் அந்த நீரில் இருக்கின்றன - அவை சொர்க்கம் செல்லுமா? என்று சர்வக்ஞர் கூறிய பாடலை கூறி தானும் அவரை படித்துள்ளதாக கூறினார். 500 ஆண்டுகளுக்கு முன்னாள் தோன்றிய சர்வக்ஞரின் பாடல்களில் திருவள்ளுவரின் தாக்கமும், சித்தர்களின் தாக்கமும் இருப்பதாக அவர் கூறினார். துளுவும், கன்னடமும், தெலுங்கும், மலையாளமும், தமிழும் ஒரே திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்த மொழிகள் - எனவே நம்மை நாம் இன்னும் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். எனக்கு 86 வயது, எடியூரப்பாவிற்கு 67 வயது எனிவே நான் அவரை தம்பி என்று அழைக்கிறேன் என்றார். இந்த இரு சகோதரர்களும், இரு மாநிலங்களின் உறவை வலுப்படித்தி மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்க வேண்டும் என்றும் கூறினார்.
பிறகு பேசிய திரு. எடியூரப்பா இரு மாநில மக்களும் ஒரு தாய் மக்களே என்று பேசினார். திருக்குறளை போற்றி பேசிய அவர், நாடு, மொழி, மதம், இனம், என்ற எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர் திருவள்ளுவர் என்று கூறினார். திருவள்ளுவரின் நூல் பல உலக மொழிகளிலே மொழி பெயர்க்கப்பட்டு இருக்கின்றது. அதன் கருத்துக்கள் எல்லோரையும் சென்று அடைய வேண்டும் என்று கூறினார். வேதத்தை போல, பைபிளை போல, குரானை போல தமிழர்களால் இது போற்றப்படுகின்றது என்றும் இவர் கூறினார். இதே கருத்துக்களை பல கன்னட அறிஞரும் கூறினர். நம் நூலை பற்றி வேறு மொழிக்காரன் பெருமையாக அவர் மொழியில் பேசுவதை கேட்கும் பொழுது மனம் குளிர்ச்சி அடைந்தது. நாம் பெரிய இலக்கிய செல்வந்தர்கள் - 2000 ஆண்டுகால செல்வத்திற்கு சொந்தக்காரர்கள் என்று என்னை நானே நினைவு படுத்தி கொண்டேன்.
பிறகு விழா முடிவடைந்தது. மொத்தத்தில் கர்நாடக தமிழனான எனக்கு, பெரும் மன மகிழ்ச்சி, மன நிம்மதி. திருக்குறள் கன்னட மொழி பெயர்ப்பு, குறளோவியம் கன்னட மொழி பெயர்ப்பு நூல்கள் இலவசமாக கொடுக்கப்பட்டன. திருக்குறள் கன்னடரிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கிவிட்டதை உணர முடிந்தது. இந்த இரு மாநிலங்களும் சுமூகமான உறவை மேற்கொண்டால் கர்நாடக வாழ் தமிழர்களுக்கு ஒரு பாதுகாப்பு தான். அதற்கும், இரு முதல்வர்களுக்கும் இந்த தமிழன் தலை வணங்குகிறான்.
5 comments:
அன்புள்ள குமரன்.
காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல் கலைஞர் எதைச் செய்யினும், குறை கானும் பதிவர் உலகம் நடுவில் தங்களின் “ இதில் அரசியல் இல்லை” என்ற அலசல் அருமை.
நம் இனம் முன்னேற வேண்டுமெனில் நம் இனம் அரசியல் கடந்த தெளிவான பார்வை கொளல் வேண்டும்
அன்புடன்
.கவி.
நல்லதொரு கட்டுரை! தங்களது அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!
திருவள்ளுவர் விழாவில் ஒரு தமிழ்ச் சொல்லேனும் ஒலிக்காதது ஏமாற்றத்தைத் தருகிறது. தமிழ்மொழி வாழ்த்துக்குக் கூட இடம் இல்லை என்றால் திருவள்ளுவர் சிலையை வைக்காமலே விட்டிருக்கலாம்.
திருவள்ளுவர் விழாவில் ஒரு தமிழ்ச் சொல்லேனும் ஒலிக்காதது ஏமாற்றத்தைத் தருகிறது. தமிழ்மொழி வாழ்த்துக்குக் கூட இடம் இல்லை என்றால் திருவள்ளுவர் சிலையை வைக்காமலே விட்டிருக்கலாம்.
அன்பின் குமரன்,
ஏகப்பட்ட பாராட்டுக்கள் வந்ததால் உடனே படிக்கவேண்டும் என்று தோன்றினாலும், சற்று பரபரப்புக் குறைவான நேரத்தில் படித்தால்தான் முழுவதையும் உள்வாங்க இயலுமென்பதால், இப்போதுதான் உங்கள் கட்டுரையைப் படித்தேன். "உணர்வோடு" எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
ஈழப் பிரச்சினையில் கருணாநிதியின் மீது உங்களுக்கிருந்த கோபம் எப்படித் தணிந்ததோ, அதேபோன்று, காவிரியாற்றில் படகில் பயணித்து ஒக்கேனக்கல் பிரச்சினைக்கு பிள்ளையார் சுழிபோட்டவர் என்பதால் எட்டியூரப்பா மீது எனக்கிருந்த கோபம், திருவள்ளுவர் சிலை திறக்கப்பட இருப்பதாக செய்தி வெளியான அன்றே தணிந்துபோனது! இது வெறும் சிலை திறப்பு விழா மட்டுமல்ல; மாறாக இரு மாநில மக்களின் மனங்களை கரைய வைத்த விழா. இத்தகைய வரலாற்று விழாவுக்கு ராஜதந்திரத்துடன் வழிகோழிய இரு மாநில முதல்வர்களுக்கும் அமெரிக்கத் தமிழர்கள் சார்பாக பாராட்டுக் கடிதம் அனுப்புவது நம் கடமை என்பது எனது பணிவான கருத்து. நன்றி.
Post a Comment